Wednesday 25 February 2015

27.02.2015 நக்கீரன் வார இதழில் வெளிவந்த மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் பேட்டி

27.02.2015 நக்கீரன் வார இதழில் வெளிவந்த மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் பேட்டி


பா.ம.க. தலைமையில் புதிய கூட்டணியை உருவாக்க அனைத்து  முயற்சிகளையும் எடுத்து வருகிறார் மருத்துவர் ராமதாஸ். இதன் முதல்கட்டமாக, பா.ம.க.வின் முதல்வர் வேட்பாளராக அன்புமணி ராமதாஸை பிரகடனப்படுத்தியிருக்கிறார். அன்புமணியை சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.

பா.ம.க. தனித்துப்போட்டியிட்டு தேர்தல்களில் அதிகபட்சமாக 4 இடங்களை மட்டுமே வெற்றிப் பெற்றிருக்கும் நிலையில், நீங்கள் முதல்வர் ஆகும் வாய்ப்பு சாத்தியமா?


1996-ல் தனித்துப் போட்டியிட்டு 4 இடங்களைப் பிடித்தோம். அன்றைக்கு வீசிய அ.தி.மு.க. எதிர்ப்பு அலையில்தான் தி.மு.க. கூட்டணி ஜெயித்தது. அந்த தேர்தலில் அ.தி.மு.க. பெற்றது 2 இடங்கள்தான். ஆகப்பெரிய கட்சி என்று சொல்லப்பட்ட அ.தி.மு.க.வே அன்றைக்கு பா.ம.க.வை விட கூடுதல் இடங்களை பிடிக்க முடியவில்லை. 2 இடங்களைப் பெற்ற அ.தி.மு.க., அடுத்து வந்த 2001 தேர்தலில் வலுவான கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடிக்க வில்லையா? இன்றைக்கு நிறைய மாற்றங்கள் ஏற்பட்டி ருக்கின்றன. அ.தி.மு.க., தி.மு.க.விற்கு மாற்றாக ஒரு நல்ல அரசியல் கட்சி வராதா என்கிற ஏக்கம் மக்களிடம் இருக்கும் நிலையில், 2016-ல் பா.ம.க. தலைமையிலான கூட்டணியை  ஆட்சிக் கட்டிலில் அமர வைப்பார்கள் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

 வடதமிழகத்தில் மட்டுமே செல்வாக்கு பெற்றுள்ள பா.ம.க., ஆட்சியை கைப்பற்றுவதற்கான சாத்தியங்கள் குறைவு என்று அரசியல் ஆய்வாளர்களின் கணிப்புகள் இருக்கும் நிலையில் உங்கள் அரசியல் வியூகம்தான் என்ன?


1996-க்கு பிறகு அ.தி.மு.க., தி.மு.க. என மாறி மாறி கூட்டணி வைத்ததுதான் நாங்கள் செய்த முதல் தவறு. இனி அந்த தவறை எப்போதும் செய்யமாட்டோம். எங்களின் மன்னிப்பை மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.வட தமிழகத்தில் பா.ம.க.வுக்கு இருக்கும் அபரிமிதமான செல்வாக்கைப் போலவே தென் தமிழகத்திலும் பெற நாங்கள் முயற்சி எடுத்திருக்கிறோம். இதற்கு நல்ல பலன் கிடைத்து வருகிறது. மது ஒழிப்பும் ஊழலற்ற அரசு நிர்வாகமும் என்கிற இரட்டை கொள்கைகள்தான் எங்களின் வியூகம். மது ஒழிப்பு பெண்களுக்கானது. ஊழலற்ற அரசு நிர்வாகம் இளை ஞர்களுக்கானது. பெண்களும் இளைஞர்களும் கை கோர்த்தால் அந்த சக்தியை யாரும் வென்றிட முடியாது. 

தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்யவிருக்கிறோம். அ.தி.மு.க., தி.மு.க. தவிர்த்து மற்ற கட்சிகள் பா.ம.க.வுடன் ஓரணியில் நிற்க அதன் தலைவர்களை சந்தித்து விவாதிக்கவிருக்கிறோம். இது தான் எங்களின் அரசியல் வியூகம். இந்த வியூகம் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும்.

பா.ம.க. தலைமையில் மற்ற கட்சிகள் ஓரணியில் திரள முன் வருவார்களா என்கிற சந்தேகம் இருக்கும் நிலையில், சாதிய கட்சி களையும் அமைப்புகளையும் மட்டுமே பா.ம.க.வால் திரட்ட முடியும்ங்கிற சூழல் இருக்கிறது. ஆனால், விஞ்ஞான வளர்ச்சியில் மக்கள் எவ்வளவோ முன்னேற்றங் களை நோக்கிப் போய்க் கொண் டிருக்க, அரசியலுக்காக சாதிய கட்டமைப்புக்குள்ளேயே மக்களை வைத்திருக்க பா.ம.க. நினைப்பது ஆரோக்கியம்தானா?


இது தவறான கருத்து. மது ஒழிப்பை பேசுகிறோம். இது சாதி பிரச்சினையா? சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த குரல் கொடுத்து அதில் ஜெயித்தோம். இது சாதிய பிரச்சினையா? நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கல்வியையும் சுகாதாரத் தையும் இலவசமாக்குவோம் என் கிறோம். இது சாதி கண்ணோட் டமா? தமிழகத்தின் முதுகெலும்பான விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் தனி பட்ஜெட் போடப்பட வேண்டு மென்கிறோம். இது என்ன சாதிய நோக்கமா? இப்படி நிறைய விசயங் களை எங்களால் பட்டியலிட முடியும். நவீன மாற்றங்களுக்கேற்ப மக்களை ஒற்றுமைப்படுத்து வதும் அவசியமாகிறது. அதை நோக்கியே எங்களின் பயணம் இருப்பதால் பா.ம.க.வின் அரசியல் ஆரோக்கியமான திசையில் தான் செல்கிறதே தவிர மாற்று பாதையில் அல்ல.

கூட்டணி தர்மத்தை நீங்கள் மீறுவதாக பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா குற்றம்சாட்டுகிறாரே?


2004, 2006, 2009, 2011 ஆகிய தேர்தல்களில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி இருந்தது. தேசிய அளவில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியாகவும் தமிழகத்தில் ஜனநாயக முற்போக்கு கூட்டணியாகவும் தான் இருந்தன. தமிழகத்தில் கூட்டணிக்கு தலைமை தி.மு.க.தான். அதேபோல தான் தமிழகத்தில் பா.ஜ.க.வை விட பெரிய கட்சியான பா.ம.க. தலைமை வகிக்க நினைக்கிறது. இதிலென்ன தவறு இருக்கிறது? தே.ஜ. கூட்டணி யில் மத்திய அமைச்சரவையில் உள்ள சிவசேனா கட்சி, மகா ராஷ்டிரத்தில் பா.ஜ.க.வை எதிர்த்துதான் அரசியல் செய்கிறது. அதேபோல, தே.ஜ.கூ.யில் இடம் பெற்றுள்ள ஹரியானா மாநில கட்சிகளான எஸ்.ஏ.டி. மற்றும் ஐ.என்.எல்.டி. ஆகிய கட்சிகள் மாநில தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்த்துதான் போட்டியிட்டன. 

மத்திய அரசில் எத்தனையோ கொள்கை முடிவுகளை எடுக்கிறார்கள். ஏதேனும் ஒன்றையாவது கூட்டணி கட்சிகளோடு கலந்தாலோசித்ததா, பா.ஜ.க.? சென்னைக்கு வந்த அமித்ஷா, தோழமைக் கட்சிகளோடு எந்த ஒரு ஆலோசனையும் செய்யாமலே, தமிழகத்தில் பா.ஜ.க. தலைமையில்தான் கூட்டணி என்றும் முதல்வர் வேட்பாளரை பா.ஜ.க. நிறுத்தும் என்றும் அழுத்தமாக சொன்னார். இதையே தமிழிசை சௌந்தரராஜன் சொல்லிக் கொண்டிருக்கிறார். இதெல்லாம் கூட்டணி தர்மத்தை பாதுகாக்கிற செயலா? மீறுகிற செயலா?

ஒவ்வொரு தேர்தல் முடிந்ததும் அடுத்த தேர்தல் வருவதற்கு முன்பு தனித்துப் போட்டி என்கிற கோஷத்தை பா.ம.க. வைப்பது வழக்கமாகிவிட்டது. அதேபோல்தான் இப்போதும் பேசுகிற ராமதாஸ், தேர்தல் நெருக்கத்தில் தி.மு.க., அல்லது அ.தி.மு.க.வோடு கூட்டணி வைத்துக் கொள்ள தயங்கமாட்டார் என்கிற சந்தேகம் பா.ம.க.விலேயே இருக்கிறதே?


இனி இதுபோன்ற தவறை ஒருபோதும் செய்யமாட்டோம். தேர்தல் நெருக்கத்தில் கூட்டணியில் சேருவோம் என்கிற எண்ணத்தில் நாங்கள் இருந் திருந்தால் முதல்வர் வேட்பாளரை அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதனால் இந்த சந்தேகம் என்பது ஊடகங்களால் திட்டமிட்டு பரப்பப் படுகிற வதந்தி. 

-


Magesh G Kshathriyan

No comments:

Post a Comment